வாகன விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
- வாகன விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- ஒருவர் படுகாயம் அடைந்தார்
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டம் கொடுங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). இவரது உறவினரான ஆண்டிமடம் மேற்கு தெருவை சேர்ந்த தயாநிதி (20). கல்லூரி மாணவர்களான இவர்கள், அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். வாகனத்தை சக்திவேல் ஓட்டி சென்றார்.
பேரழி சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை சக்திவேல் கடக்க முயன்றனர். அப்போது எதிரே அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சம்பத் (65) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பத், சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கால் முறிவு ஏற்பட்ட தயாநிதியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.