உள்ளூர் செய்திகள்

வீட்டு கதவை உடைத்து 7 பவுன், ரூ.15 ஆயிரம் திருட்டு

Published On 2023-05-17 06:30 GMT   |   Update On 2023-05-17 06:30 GMT
  • கண்காணிப்பு கேமிரா பழுது நீக்கும் தொழில் செய்பவர் வீட்டில் கொள்ளை
  • மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை

பெரம்பலூர்,

அன்னை இந்திரா நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது மகன் கிஷோர்குமார்(வயது 32). இவர் தனது சொந்த வீட்டின் ஒரு பகுதியில் கண்காணிப்பு கேமரா, குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் யூ.பி.எஸ். உபகரணங்கள் பழுதுநீக்கும் வேலை செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான குன்னம் தாலுகா வடக்கலூரில் நேற்று முன்தினம் நடந்த கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அவர் பெரம்பலூருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றபோது முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்து. இதனால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, திறந்தபடி கிடந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த தாலிச்சங்கிலி, கம்மல் மற்றும் தங்கச்சங்கிலி உள்பட 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு போலீசார் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News