அகரம்சீகூர் அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற அண்ணன்-தம்பி அதிரடி கைது
- அகரம்சீகூர் அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற அண்ணன்-தம்பி அதிரடி கைது செய்யப்பட்டனர்
- அக்கம், பக்கத்தினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகேயுள்ள லெப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அப்துல்சமது மற்றும் அப்துல் ஹமீத் ஆகியோரது வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தத்தை கேட்டது. இதனையடுத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.அப்போது அந்த வீட்டின் உள்ளே 2 பேர் பீரோவை உடைத்து பொருட்களை திருடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணனின் மகன்கள் முருகன் (வயது 35), சிவா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து சகோதரர்களான 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பலத்த காயங்களுடன் இருந்ததால் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.