மூதாட்டி மீது ஊற்றிய பெட்ரோல் எதிர்பாராமல் தீ பிடித்து விபரீதம்
- மகன் உட்பட 2 பேர் கைது
- விளையாட்டு விபரீதமானது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அத்தியூர் வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (வயது 40). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (30) அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.பின்னர் மோகன்தாஸ் வீட்டில் பெட்ரோல் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனது மோட்டார் சைக்கிளுக்கு ஒரு கேனில் பெட்ரோலை வாங்கியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.பின்னர் வழியில் மோகன்தாஸ் தனது அத்தையான அத்தியூர் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் கதிர்வேல் மனைவி மஞ்சாயியை(75) பார்த்தார்.உடனே இருவரும் அங்கு இறங்கி மூதாட்டி இடம் நலம் விசாரித்தனர். அப்போது மஞ்சாயி மருமகனிடம் எதற்காக பெட்ரோல் வாங்கி செல்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு உன் மீது ஊற்றி எரிப்பதற்காக என கூறிக்கொண்டு, விளையாட்டாக கையில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றுவது போல் காண்பித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மூடியிலிருந்து கசிந்த பெட்ரோல் மஞ்சாயி மீது பட்டது.அந்த கணம் அருகில் நின்று கொண்டிருந்த நண்பர் ராஜதுரை வாயில் சிகரட்டை வைத்து பற்ற வைத்ததாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது தீப்பிடித்தது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மருமகன் மோகன்தாஸ் ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். விளையாட்டாக மூதாட்டி மீது ஊற்றிய பெட்ரோல் துளிகளால் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மங்களமேடு பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.