மரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் சாத்தா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஜெயந்தி. இருவருக்கும் சந்ரூ என்கிற கோபால்சாமி(வயது 19) என்ற மகன் உள்ளார். இவர் ஈஈஈ இன்ஜினீயரிங் படித்து உள்ளார். அவ்வப்போது டிராக்டரை கொண்டு உழவு செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தந்தை ஏழுமலை, கோபால்சாமியை வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அவர் தனது கிராமத்தில்தான் விவசாய தொழில் பார்ப்பேன் என்று கூறி வெளிநாடு செல்வதற்கு மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு தந்தை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகன் கோபால்சாமி, வயல் வெளி பகுதிக்கு சென்று அங்குள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனை காணவில்லை என்று தாய் ஜெயந்தி தேடி அலைந்த போது தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டுள்ளனர். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.