குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்-முத்துக்காடு, வேங்கைவயலில் ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணா கள ஆய்வு
- குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் முத்துக்காடு, வேங்கைவயலில் ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணா கள ஆய்வு மேற்கொண்டார்
- விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சி, வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முன்னிலையில் களஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். முன்னதாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றையதினம் வேங்கைவயல் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியை பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், இது மனித தன்மையற்ற செயல் எனவும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஓய்வுபெற்ற எம்.சத்தியநாராயணன் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முன்னிலையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, பொதுசுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் வேங்கைவயலில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர் எம்.சத்தியநாராயணன் கலந்தாலோசனை செய்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்),உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.