உள்ளூர் செய்திகள் (District)

சாக்கு ஆடை அணிந்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழா

Published On 2022-09-15 09:09 GMT   |   Update On 2022-09-15 09:09 GMT
  • கமுதி அருகே அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
  • களிமண் சேறு பூசி நேர்த்திக்கடன் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம்,.கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி மாத பொங்கல் விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளி அம்மனுக்கு வருடா வருடம் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இத் திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நிறைவு நாளான நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம்,களிமண் சேறு பூசி நேர்த்திக்கடன் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

அழகுவள்ளியம்மன் கேட்டதை தரும் சக்தி கொண்டதாக இருப்பதால் இந்த கிராமத்துகாரர்கள் வெளியூரில் வசித்தால் கூட வருடத்திற்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து பொங்கல் மற்றும் முளைப்பாரி, சாக்கு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சாக்குகளை பேண்ட் மற்றும் சட்டை மாதிரி தைத்து அதை அணிந்து பின்பு வைக்கோல்களை திணித்து கனமான மனிதர் போல மாற்றி முகத்தையும் சாக்கு வைத்து மூடி வைத்த வைக்கோல் மனிதர்கள் 6 பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டபோது பெண்களின் கும்மி மற்றும் ஆண்களின் கும்மி மேள தாளங்களுடன் சாக்கு ஆடை அணிந்த பக்தர்களும் கும்மி அடித்து முளைப்பாரிக்கு முன்பு நடனம் ஆடி சென்றனர்.

மேளதாளம்,வான வேடிக்கையுடன் இந்த ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளோடு அழகு வள்ளி அம்மன் கோவிலுக்கு சென்று கிராமத்தில் உள்ள ஊரணியில் பாரிகளை கரைத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News