உள்ளூர் செய்திகள் (District)

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தி.மு.க.வினர் முனைப்புடன் செயல்பட வேண்டும்

Published On 2023-10-29 08:00 GMT   |   Update On 2023-10-29 08:00 GMT
  • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
  • நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க.செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் 4,5,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் , 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து படிவங்கள் அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் 2024ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத பெயர்களையும், புதிதாக குடி பெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் ,

தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில் தி.மு.க.வின் ஒன்றிய, நகர,பேரூர், ஊர் கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்கு சாவடி நிலைய முகவர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News