உள்ளூர் செய்திகள் (District)

சின்னத்துரை மனைவி சித்ராவிற்கு பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை சரவணக்குமார் எம்.எல்.ஏ வழங்கினார்.

பெரியகுளத்தில் சுவர் இடிந்துவிழுந்து ஓய்வுபெற்ற போலீஸ்காரர் சாவு- எம்.எல்.ஏ ஆறுதல்

Published On 2023-11-11 04:39 GMT   |   Update On 2023-11-11 04:39 GMT
  • கதவை உடைத்து பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி போலீஸ்காரர் இறந்துகிடந்தார்.
  • பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அவரது இறந்தவரின் மனைவியிடம் எம்.எல்.ஏ வழங்கினார்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகில் உள்ள காமாட்சிபுரம் மேற்குதெருவை சேர்ந்தவர் சின்னத்துரை(63). இவர் விருவீடு போலீஸ்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டதால் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி சித்ரா மற்றும் 2 மகன்கள் தனியாக வசித்து வந்தனர்.

நேற்று சின்னத்துரை வீடு நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது மகன் நிசாந்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னத்துரை இறந்துகிடந்தார்.

இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பெரியகுளத்தில் உள்ள சின்னத்துரை வீட்டிற்கு சென்ற சரவணக்குமார் எம்.எல்.ஏ அவரது மனைவி சித்ராவிற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை சித்ராவிடம் வழங்கினார். அப்போது பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், தாசில்தார் அர்ஜூணன், நகரச்செயலாளர் முகமது இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News