உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணுக்கு ஆபாச 'மெசேஜ்' அனுப்பி கொலை மிரட்டல் விடுத்த வருவாய் ஆய்வாளர் கைது

Published On 2024-07-05 06:15 GMT   |   Update On 2024-07-05 06:15 GMT
  • தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவையாவை கைது செய்தனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் கணவரை இழந்த நிலையில் தன் குழந்தையுடன் காந்திநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சங்கரன்கோவிலில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த குருவையா என்பவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர் பழங்கோட்டை பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கும் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் அங்கிருந்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இவர் ஏற்கனவே சங்கரன்கோவிலில் பணிபுரிந்து வந்ததபோது காந்திநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அறிமுகம் என்பதால் அவருக்கு தன்னுடைய செல்போன் மூலம் ஆபாச 'மெசேஜ்' அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து போலீசில் கூறினால் கொன்று விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த இளம்பெண் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவையாவை கைது செய்தனர்.

இதேபோல் காந்திநகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (30), ராஜா (35), சண்முக பிரபு (36) ஆகியோர் அந்த பெண் வேலைக்கு செல்லும் போது அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும், மேலும் அவரிடம் ஆபாச வீடியோ வெளியிட்டு விடுவோம் என கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் முத்துக்குமார், ராஜா, சண்முகபிரபு ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News