உள்ளூர் செய்திகள் (District)

குடிநீர் கேட்டு சாலைமறியல்

Published On 2023-09-10 10:13 GMT   |   Update On 2023-09-10 10:13 GMT
  • கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை.
  • இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவமனை தெரு, புது தெரு, பொன்னாரத்தம்மன் கோவில் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் குடிநீர் வழங்கக்கோரி முத்துப்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News