கைத்தறி உரிமையாளரிடம் ரூ.1.45 லட்சம் நகை-பணம் திருட்டு
- ரவி செல்வம் அடிக்கடி தொழில் நிமித்தமாக கோவை வருவது வழக்கம்.
- திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கோவை,
கரூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ரவி செல்வம் (38), கைத்தறி உரிமையாளர். இவர் அடிக்கடி தொழில் நிமித்தமாக கோவை வருவது வழக்கம். அப்படி வரும்போதெல்லாம் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் தங்குவார். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த அவர் அங்கு தங்கினார்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி அங்கு வந்த சிலர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி கரூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அன்று இரவு ரவி செல்வம் மீண்டும் கோவை திரும்பினார். அபார்ட்மென்டுக்கு சென்ற போது, அங்கு அலமாரியில் வைத்திருந்த முக்கியமான ஆவணங்கள், ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ரவி செல்வம் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவி செல்வத்தை விசாரணைக்கு என அழைத்து சென்றவர்கள் யார்? திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.