உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் நகைகளை விற்று ரூ.19 லட்சம் மோசடி

Published On 2023-04-09 09:27 GMT   |   Update On 2023-04-09 09:33 GMT
  • ரூ. 19 லட்சம் மதிப்பிலான 295 கிராம் தங்கம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
  • ேபாலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை காந்திபுரத்தில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

இங்கு வாரம் ஒரு முறை வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் நகைக்கடையில் கணக்கு தணிக்கை செய்த போது ரூ. 19 லட்சம் மதிப்பிலான 295 கிராம் தங்கம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நகைக்கடை மேலாளர், உதவி மேலாளர் சசிக்குமார் என்பவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நகைகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ததாகவும், அதற்குண்டான பணம் ரூ.19 லட்சத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறினார்.

மேலும் அவர் ரூ. 19 லட்சத்துக்கு காசோலையையும் கொடுத்தார். அந்த காசோலையை காந்திபுரத்தில் உள்ள வங்கியில் செலுத்திய போது கையொப்பம் பொருந்தாமல் திரும்பியது.

உதவி மேலாளர் சசிக்குமார் விற்பனை செய்த நகைக்கான பணத்தை கொடுக்காமல் ரூ. 19 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு சசிக்குமாருக்கு அவருடன் வேலை பார்க்கும் விஜயன், ரமேஷ் ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர்.

இது குறித்து நகைக்கடை மேலாளர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நகைக்கடை உதவி மேலாளர் சசிக்குமார், விஜயன், ரமேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News