அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு
சேலம்:
சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்.இவரது மனைவி கலைவாணி (வயது 34). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கலைவாணி மீண்டும் கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த 24-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் அவர் இறந்து விட்டதாக புகார் கூறினர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் கூறினர். இதை அடுத்து கலைவாணி உடல்சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுப்பதால் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி கூடுதல் போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் குவிக்கப்பட்டுள்ளனர்.