மாண்டஸ் புயல், கடல் சீற்றத்தால் தொலைதூரம் சென்ற கடல் மீன்கள்: மீன்பிடி தொழில் பாதிப்பு
- இறால், வஞ்சிரம், ஷீலா, பாறை போன்ற விலை உயர்ந்த மீன்கள் ஏதும் வலையில் சிக்கவில்லை.
- இவ்வகை மீன்களை பிடிக்க சிறு வகை படகுகளில் ஆழ்கடலுக்கு செல்ல முடியாது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பகுதியில் மழை, கடல் சீற்றம், "மாண்டஸ்" புயல் என கடந்த 7 நாட்களாக கடலின் அலை மேலோட்டமாகவும், ஆழ்கடல் அழுத்தமும் இயற்கைக்கு மாறாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதையடுத்து மாமல்லபுரம், தேவநேரி, நெம்மேலி, வெண்புருஷம், உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
வழக்கம் போல் இவர்கள் 5.கி.மீ., துரம் வரை சென்று மீன் பிடித்தனர். ஆனால் வலையில் இறால், வஞ்சிரம், ஷீலா, பாறை போன்ற விலை உயர்ந்த மீன்கள் ஏதும் சிக்கவில்லை. அவைகள் "மாண்டஸ்" புயலால் கடலில் சீற்றம் மாறுபட்டதால் 25 கி.மீ., தூரத்திற்கு சென்றுவிட்டதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வகை மீன்களை பிடிக்க சிறு வகை படகுகளில் அங்கு செல்ல முடியாது. அப்படி சென்றாலும், டீசல், நேரம், மோட்டார் தேய்மானம் கணக்கிட்டால் ஆதாயம் கிடைக்காது. அதனால் வீட்டுக்கு தேவையான மத்தி, பூச்சி, நாக்பூச்சி மீன்களை மட்டும் பிடித்து வரும் சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.