புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு கூலிப் போன்ற போதை தரும் பொருட்கள் விற்கப்படுவதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான போலீசார் செல்வ விநாயகர் கோவில் தெருவில் வெங்கடேஷ் என்பவரது கடையில் 5 பாக்கெட் கணேஷ் புகையிலை மற்றும் 8 பாக்கெட் கலைமான் புகையிலையும் பறிமுதல் செய்தனர். தெற்கு வேளார் தெருவில் உள்ள ஜெகநாதன் கடையில் பள்ளி மாணவர்களுக்கு கூலிப் போன்ற போதை தரும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்த கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
வெங்கடேஷ், ஜெகநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிங்கம்புணரியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.