உள்ளூர் செய்திகள் (District)

இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கினர்

Published On 2023-04-30 08:09 GMT   |   Update On 2023-04-30 08:09 GMT
  • தேவகோட்டை அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கினர்.
  • தனி படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி 11-ந் தேதி அதிகாலையில் தாய் கனகம், மகள் வேலுமதி ஆகியோரை கொலை செய்து 60 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அருகில் படுத்திருந்த வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனை மண்டையை உடைத்து காயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பினர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு சம்பந்தமாக நேரடி கண்காணிப்பில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனி படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கிருப்பதாக தெரிகிறது. அவர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News