மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த வியாபாரியை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி- 2 பேர் கைது
- தாக்குதலில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து வினோத் குமார், பாபுலால் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
திருவொற்றியூர்:
கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும் தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த வினோத் குமார், பழைய வண்ணாரப்பேட்டை மன்னப்பன் தெருவை சேர்ந்த பாபுலால் ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சுரேஷ்குமார் பென்சில் பேக்டரி ரெயில்வே கேட் அருகில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது வினோத்குமாரும், பாபு லாலும் மதுகுடிக்க பணம் கேட்டனர். ஆனால் சுரேஷ் குமார் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
எனினும் ஆத்திரத்தில் இருந்த வினோத்குமாரும், பாபுலாலும் சம்பவத்தன்று சுரேஷ்குமாரை மதுகுடிக்கலாம் என்று கூறி அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் சென்றனர். திடீரென அவர்கள் அருகில் கிடந்த கல்லால் சுரேஷ்குமாரை தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கினார். உடனே வினோத்குமாரும், பாபு லாலும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து வினோத் குமார், பாபுலால் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.