உள்ளூர் செய்திகள்

ஓமலூர் அருகே 3 மாத கர்ப்பிணி பெண் மர்ம மரணம்- கோட்டாட்சியர் விசாரணை

Published On 2023-03-12 05:18 GMT   |   Update On 2023-03-12 05:18 GMT
  • உறவினர் ஒருவர், ரமேஷின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகாநதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
  • 3 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சியில் கருத்தானூர் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் ரமேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மகாநதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சக்கரைசெட்டிபட்டி புதுக்கடை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

மகாநதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் நடந்த தகராறை தொடர்ந்து ரமேஷ் குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு உறவினர் ஒருவர், ரமேஷின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகாநதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர் இது பற்றி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மகாநதி உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மகாநதியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் ஓமலூர் போலீசார், மகாநதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஓமலூர் போலீசார், சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து மகாநதி எப்படி இறந்தார்? என்று ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் இறந்ததால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 3 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News