கொங்கணாபுரம் வார சந்தையில் 9 ஆயிரம் ஆடுகள் விற்பனை- ரூ.6 கோடிக்கு வர்த்தகம்
- தக்காளி, கேரட், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி என 160 டன் காய்கறிகள் விற்பனையானது.
- புளி கொட்டையுடன் உள்ள கூடை 6 கிலோ முதல் 7 கிலோ வரை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போனது.
எடப்பாடி:
எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள வார சந்தையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று ஆடுகள் வரத்து அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் சந்தைக்கு வந்து இருந்தனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பகுதியில் இருந்து சுமார் 9000 ஆடுகள், பந்தய சேவல், 4000 கோழிகள் என விற்பனைக்கு வந்தன. 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5200 முதல் ரூ.5700 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.10,200 முதல் ரூ.11,600 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2500 முதல் ரூ.3000 வரையும் விலை போனது.
அதேபோல், பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.400 வரையும், பந்தய சேவல், காகம்கீரி, செங்கருப்பு மயில், சுருளி ரகத்தைச் சேர்ந்த பந்தய சேவல்கள் ரூ.1000 முதல் ரூ.6500 வரையும் விலை போனது. அதேபோல் தக்காளி, கேரட், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி என 160 டன் காய்கறிகள் விற்பனையானது. புளி கொட்டையுடன் உள்ள கூடை 6 கிலோ முதல் 7 கிலோ வரை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போனது.
சந்தையில் மொத்தம் ரூ.6.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.