மின்கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து கோவையில் 3 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோவை:
மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஆகிய 3 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடத்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் எம்.எல்.ஏ., தமிழக ஹஜ்கமிட்டி தலைவர் சி.டி.சி. அப்துல் ஜப்பார்,ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாைளயம் பஸ் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.