ஆரணி அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 3 வாலிபர்கள் கைது
- அகரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
- குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அகரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அவர்கள் விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த சுமார் 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர்கள் ஆரணி, சுப்பிரமணிய நகரைச் சேர்ந்த சந்தோஷ்சிவம்(வயது20), நரேஷ்(வயது19) என்பது தெரியவந்தது.
மேலும், ஆரணி சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வாலிபர் விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த சுமார் 300 கிராம் எடை கொண்ட கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் சின்னக்கிளாம்பாக்கம் கிராமம்,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ்(வயது21) என்பது தெரிய வந்தது. மூன்று வாலிபர்களையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் மூன்று வாலிபர்களையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.