உள்ளூர் செய்திகள் (District)
நீர்மட்டம் 90 அடியை எட்டியதால் கடல்போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.58 அடியாக உயர்வு

Published On 2022-07-14 04:16 GMT   |   Update On 2022-07-14 04:16 GMT
  • தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.

சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையில் தற்போது 98 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. இதனால் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

பவானிசாகர் அணைக்கு இன்று காலை 8 மணி அளவில் 16 ஆயிரத்து 891 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.58 அடியாக இருந்தது. அரக்கன்கோட்டை -தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.

பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News