உள்ளூர் செய்திகள் (District)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.58 அடியாக உயர்வு

Published On 2022-07-18 04:11 GMT   |   Update On 2022-07-18 04:11 GMT
  • பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும்.
  • அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

சத்தியமங்கலம்:

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும். இதில் அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.58 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்னும் 2 நாட்களில் 100 அடியை எட்டி விடும்.

இதனால் அணையில் இருந்து எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பவானி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் இறங்கி துணி துவைக்கவும், குளிக்கவும் கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

தொடர்ந்து அணையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆடிமாத தொடக்கத்திலேயே பவானிசாகர் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News