உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் பைக் மீது கார் மோதியதில் 4 பேர் பலி

Published On 2024-08-03 09:26 GMT   |   Update On 2024-08-03 09:26 GMT
  • விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா (28). இவர்களுக்கு ரக்ஷிதா (7) என்ற மகளும், ரக்ஷன் (5) என்ற மகனும் உள்ளனர். இன்று அருணாவின் தாய் சரோஜாதேவி (60) என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஜார்ஜ் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்-நத்தம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

நல்லாம்பட்டி அருகே இவர்கள் வந்து கொண்டிருந்த போது எதிரில் நத்தம் நோக்கி வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜார்ஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதி சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. அப்போது மற்றொரு பைக்கில் வந்த நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்த குழந்தைசாமி என்பவர் மீதும் மோதியது. இதில் ஜார்ஜ், அருணா, அவரது 2 குழந்தைகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காரை ஓட்டி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சரோஜாதேவி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே பைக்கில் 5 பேர் வந்ததால் கார் மோதிய வேகத்தில் பைக்கை நிறுத்த முடியாமல் விபத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News