சாத்தான்குளத்தில் கடை பிரியாணியில் இறந்து கிடந்த பூரான்- வீடியோ வைரல்
- உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஓட்டல்கள் மற்றும் உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
- திருச்செந்தூர் உணவு பாதுகாப்புத்துறை மண்டல அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் ஆய்வு செய்ய உள்ளனர்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் ஒருவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் ஒரு பூரான் இறந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் இது தொடர்பாக கடைக்காரரிடம் கேட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஓட்டல்கள் மற்றும் உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும், கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் பாதுகாப்பு இல்லாமலும், ஓட்டல்களில் சுகாதாரம் குறைவாகவும் இருந்தால் அவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் உணவு பாதுகாப்புத்துறை மண்டல அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் ஆய்வு செய்ய உள்ளனர்.