உள்ளூர் செய்திகள் (District)

தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மது விற்க ஏற்பாடு

Published On 2022-10-16 07:20 GMT   |   Update On 2022-10-16 07:22 GMT
  • டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்தாண்டு நவம்பர் 3 மற்றும் 4-ந்தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகிது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனிக்கிழமை 22-ந்தேதி ரூ.200 கோடி, 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.200 கோடி, தீபாவளி பண்டிகை அன்று ரூ.200 கோடி என்ற அளவில் மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை 40 சதவீதம் சாதாரண ரகம் மதுபானங்கள், 40 சதவீதம் நடுத்தர ரக மதுபானங்கள், 20 சத வீதம் உயர்தர மதுபானங்கள் என்று கடைகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளுக்கு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் எவ்வித சேதாரமும் ஏற்படா வண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது

மேலும், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளுக்கு மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயர்த்தப்பட்டு, பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News