சத்தியமங்கலம் அருகே சோலார் மின் வேலியில் சிக்கி மூதாட்டி மரணம்
- போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
- இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி தொட்டபுரத்தில் பெருந்துறையை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை சுற்றி வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க சோலார் பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலமலை கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜுக்கு, தொட்டபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி ராமன் போன் மூலமாக தொடர்பு கொண்டு சண்முகத்தின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேட்டரி மின் வேலியில் சிக்கி சுமார் 65 முதல் 70 வயதுடைய மூதாட்டி இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜ் ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.