உள்ளூர் செய்திகள் (District)

பறக்கும் படையினர் சோதனை: கூடலூர் பகுதியில் இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல்

Published On 2024-03-20 10:11 GMT   |   Update On 2024-03-20 10:11 GMT
  • கோத்தகிரி-கட்டப்பெட்டு சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • பறிமுதல் செய்யப்பட்ட பணம், குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஊட்டி:

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பறக்கும்படை அதிகாரி பூபாலன் தலைமையிலான குழுவினர், கோழிக்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரமேஷா என்பவரை சோதனை செய்து, அவரிடம் ரூ.1 லட்சமும், கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ரகுமானிடம் ரூ. 1.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் தொரப்பள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி லதா மற்றும் எஸ்.எஸ்.ஐ., திருக்கேஸ்வரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகஷீர் என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.2.29 லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்ததாக சத்தியம் என்பவரிடமிருந்து, ரூ.99 ஆயிரமும், அஷ்ரப் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

முதுமலை கார்குடி பகுதியில் நடந்த சோதனையில், எர்ணாகுளத்தை சேர்ந்த தாமஸ் என்பவரிடமிருந்து ரூ.94 ஆயிரமும், மாக்கமூலா பகுதியில் நடந்த சோதனையில், மலப்புரம் ஷாஜி என்பவரிடமிருந்து, 3.95 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.11.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தொகை அனைத்தும், கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கூடலுார் பகுதியில் இதுவரை மொத்தம் ரூ.30.91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோத்தகிரி-கட்டப்பெட்டு சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கூடலூரைசேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை சோதனை மேற்கொண்டனர். அவரிடம் ரூ.52 ஆயிரத்து 250 பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம், குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News