ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
- சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு சவரன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
- ஆனால் அதன்பின் விலை உயர்த்தப்பட்டு இருந்ததால் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை:
தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வருகிறது. பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வருவதும், பின்னர் தாண்டுவதாகவும் இருக்கிறது.
நேற்று முன்தினம் பவுன் ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அன்று பவுனுக்கு ரூ.656 குறைந்து ரூ.37 ஆயிரத்து 464-க்கு விற்றது. நேற்றும் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37 ஆயிரத்து 424-க்கு விற்றது.
தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை சரிந்ததால் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து பவுன் மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.856 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.103 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 785 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.65 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65-க்கு விற்கிறது.
தங்கம் விலையில் ஒரே நாளில் ரூ.856 உயர்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால் அதன்பின் விலை உயர்த்தப்பட்டு இருந்ததால் பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.
தற்போது விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வந்த நிலையில் ஒரே நாளில் ரூ.856 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.