பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்கு
- பாண்டியன், மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட மணிமேகலை, பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இவருடைய வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மணிமேகலை (45) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது மணிமேகலைக்கு பண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மணிமேகலை வேலையில் இருந்து நின்று விட்டார்.
இருப்பினும் வேலைக்கு வர சொல்லி பாண்டியன் அவரை நிர்பந்தம் செய்து வந்தார். ஆனாலும் அவர் வேலைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் பாதிக்கப்பட்ட மணிமேகலை, பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பால கிருத்திகா என்.ஆர்.என் பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.