உள்ளூர் செய்திகள்

சொந்த ஊருக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்- தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-12-24 05:39 GMT   |   Update On 2022-12-24 05:39 GMT
  • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் முதலே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.
  • கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்களிலும் பொது மக்கள் பயணம் செய்தனர். நேற்று ஆம்னி பஸ்களும் அதிக அளவில் சென்றன.

போரூர்:

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து உள்ளது.

தென் மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் இருக்கைகள் நிரம்பி விட்டது. ஆம்னி பஸ்களில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை பயன்படுத்தி தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதால் பெரும்பாலான மக்கள் தற்போது அரசு பஸ்களில் பயணம் செய்யவே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் தலா 300 பஸ்கள் வீதம் கூடுதலாக 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று காலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை மக்கள் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு படை எடுத்தனர்.

தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் நேற்று கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 300 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் முதலே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர். கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்களிலும் பொது மக்கள் பயணம் செய்தனர். நேற்று ஆம்னி பஸ்களும் அதிக அளவில் சென்றன.

பெரும்பாலான சென்னை மக்கள் கார்கள் மற்றும் வாகனங்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் நேற்று மதியத்துக்கு பிறகு தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. ஒரே நேரத்தில் பஸ்கள் கிளம்பியதால் இந்த பகுதிகளில் வாகனங்கள் மிகவும் ஊர்ந்தே சென்றன. இரும்புலியூரில் ராஜகரை முதல் பெருங்களத்தூர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

செங்கல்பட்டு அடுத்த பரனூர் டோல்கேட்டில் நேற்று மாலை 4-மணியில் இருந்து சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாட செல்லும் பொதுமக்கள் கார், பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் விடிய விடிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி.பரத் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், நேற்று அமாவாசையையொட்டி மேல்மலையனூர் கோவிலுக்கு செல்கின்ற பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News