உள்ளூர் செய்திகள்

நீர்வரத்து 1.16 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2024-07-27 05:17 GMT   |   Update On 2024-07-27 05:18 GMT
  • ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தெரியாதவாறு மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
  • பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி:

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளன.

இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலுவு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கன அடியாக இருந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து 1.50 லட்சம் கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கனஅடியாக மேலும் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தெரியாதவாறு மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதனால் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, காவிரி ஆற்றின் கரையின் இருபுறமும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதாலும், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ஆற்றங்கரையோர பகுதியிலும், தாழ்வான பகுதியிலும் வசித்து வரும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 13-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கர்நாடகா அணைகளில் இருந்து 1.50 லட்சம் கனஅடி அளவில் நீர் திறக்கப்பட்டதால், கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News