உள்ளூர் செய்திகள் (District)

மதுராந்தகம் அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2023-06-05 06:42 GMT   |   Update On 2023-06-05 06:42 GMT
  • விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
  • அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுராந்தகம்:

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அச்சரப்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.

அந்த நேரத்தில் சங்கர், அரசு பஸ்சென்ற பாதையில் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் திடீரென அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் நசுங்கியதில் தீப்பிடித்தது. இதில் பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். அவ்வழியே சென்றவர்கள் பஸ்சின் முன்பகுதியில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

அச்சரப்பாக்கம் போலீசார் பலியான சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News