மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
- விபத்தில் படுகாயம் அடைந்த அபினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபினேஷ் (வயது20). இவர் பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். மேலும், தனது குடும்ப வறுமையின் காரணமாக பகுதி நேரமாக பெயிண்டிங் மற்றும் கொத்தனார் வேலைக்கும் சென்றார்.
இந்நிலையில் அபினேஷ், மடவிளாகம் பகுதியில் வசித்து வரும் நண்பரான முரளி(21) என்பவருடன் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். கன்னிகைப்பேர்-மஞ்சங்காரணை நெடுஞ்சாலையில் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது.. இதில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் அதிவேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அபினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நண்பர் முரளி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.