உள்ளூர் செய்திகள்

6-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 58 வயது முதியவரிடம் விசாரணை நடத்த மகளிர் போலீசார் முடிவு

Published On 2023-02-16 07:49 GMT   |   Update On 2023-02-16 07:49 GMT
  • நள்ளிரவில் திடீரென்று சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. மேலும் கடுமையான வயிற்று வலியால் துடித்தார்.
  • பிரசவ வார்டில் அனுமதித்து சோதனை செய்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிந்தது.

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியி ல் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பெற்றோர் கூலி வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுமி வீட்டு பாடங்களை முடித்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த தோழிகளுடன் சேர்ந்து விளையாட செல்வார்.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் வீட்டு பாடங்களை முடித்ததும் விளையாட சென்ற சிறுமி, பெற்றோர் வந்ததும் வீடு திரும்பினார். பின்னர் அவர்களுடன் சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கினார்.

நள்ளிரவில் திடீரென்று சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. மேலும் கடுமையான வயிற்று வலியால் துடித்தார். இதைப்பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்களது மகளுக்கு இப்படியொரு பிரச்சினையா என்று அழுதவாறு, அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்தனர்.

அதன்பேரில் திருச்சியில் டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்தனர். பின்னர் அவரை பிரசவ வார்டில் அனுமதித்து சோதனை செய்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிந்தது.

இதையடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் தன்னிடம் ஆசைவார்த்தை கூறியும், பலமுறை தன்னை மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ந்து போன பெற்றோர் இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News