உள்ளூர் செய்திகள்

3 மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி- 3 வயது ஆண் குழந்தை பலி

Published On 2024-09-19 07:08 GMT   |   Update On 2024-09-19 08:55 GMT
  • அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பாப்பாங்குளம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு.

இவர் நாகர்கோவில் பகுதியில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உச்சிமகாளி (35). இவர்களுக்கு பழனி சக்தி குமார் (8). இந்திரவேல் (6), பிரேம் ராஜ் (3) என்ற 3 மகன்கள் உள்ளனர். உச்சிமாகாளி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடும்ப செலவுக்காக உச்சிமாகாளி சுய உதவி குழுவில் பணம் வாங்கி உள்ளார். அதனை திருப்பி செலுத்த முடியாததால் மற்ற குழுக்களிலும் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு பணத்தை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த உச்சிமாகாளி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் தனது 3 குழந்தைகளையும் விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் இன்று காலை அவர்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதனால் அவர்கள் வாந்தி எடுத்தவாறு மயங்கி விழுந்துள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உச்சிமாகாளி மற்றும் அவரது மகன்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 வயது ஆண் குழந்தை பிரேம்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News