பழைய இரும்பு கடையில் செல்போன்கள் திருட்டு
- காலையில் வடமாநில ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது 4 செல்போன்களும் திருட்டு போனது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சித்திரை குமார் (வயது 40). இவர் மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் தங்கி 4 வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் இரவு வட மாநில தொழிலாளர்கள் கடையில் இரும்பு ஷட்டரை பூட்டாமல் தூங்கிகொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த 4 செல்போன்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை திருடி சென்றனர். காலையில் வடமாநில ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது 4 செல்போன்களும் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து கடை உரிமையாளர் சித்திரை குமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.