அரசு பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் தற்கொலை முயற்சி
- தருமபுரி அருகே அரசு பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
- தேர்வு எழுதும் மாணவர்களை அருகில் அமர வைத்து எழுத வைத்ததை தலைமையாசிரியர் கண்டித்்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லோகநாதன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் பாலக்கோட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பிளஸ்-2 மாணவர்களுக்கு வேளாண்மை பாடம் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையில் கிருஷ்ணன் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். அப்போது காலையில் நடந்த மாணவர்கள் கூட்டத்தில் அனைவரும் முன்பும் ஆசிரியர் கிருஷ்ணன், இடைத்தேர்வில் மாணவர்களை தனித்தனியே அமர்ந்து எழுத வைக்காமல், ஒன்றாக அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளார். இது மிகவும் தவறான செயல் என்றும், இனிமேல் இதுபோன்று இந்த ஆசிரியர் நடந்து கொள்ள வேண்டாம் என்று தலைமை ஆசிரியர் சுட்டி காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் சிறிது நேரத்தில் கடைக்கு சென்று கயிறு ஒன்று வாங்கி வந்து பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு திடீரென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக பென்னா கரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் பள்ளிக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். மேலும், அவர் பள்ளிக்கு வந்தாலும் வேலை செய்யாமல் இருந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து தலைமைஆசிரியர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் வந்து பார்வையிட்டபோது கிருஷ்ணன் வேலை செய்யாமல் இருந்துள்ளார். உடனே அவரை அழைத்து இனி இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி சென்றனர். இந்த நிலையில் தேர்வில் மாணவர்களை அருகருகே அமரவைத்து தேர்வு எழுத அனுமதித்ததாக தெரியவந்தது. இதனை தலைமை ஆசிரியர் கண்டித்து இன்று மாண வர்கள், மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் சுட்டி காட்டியதால், கிருஷ்ணன் தற்கொலை முயன்றுள்ளார்.
மேலும், இந்த ஆசிரியர் இதுபோல் பாலக்கோடு அரசு பள்ளி, பி.அக்ரஹாரம் அரசு பள்ளி ஆகிய பள்ளிகளில் இதுபோன்று ஏற்கனவே செயல்பட்டதால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை பென்னாகரம் அரசு பள்ளியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.