திருப்பூரில் மாவட்ட மைய நூலகம் அமைத்து தர வேண்டும் - முதலமைச்சருக்கு க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கோரிக்கை
- தற்போது புத்தகம் வாசிப்போர் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருவதை காண முடிகிறது.
- அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலகம் அமைத்துத் தரும்படி மாவட்ட மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பூர்:
திருப்பூரில் மாவட்ட மைய நூலகம் அமைத்து தரும்படி திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் கோரியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க. செல்வராஜ் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்திற்கு என விரிவுபடுத்தப்பட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மாவட்ட மைய நூலகம் என்பது இதுவரை இல்லாத நிலையே உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளும் மாணவர்கள் குறிப்பெடுக்கவோ, அமர்ந்து படிக்கவோ அல்லது புதுப்புது புத்தகங்கள் சம்பந்தமாக விவாதிக்கும் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவோ தற்போது திருப்பூரில் உள்ள நூலகங்களில் போதிய இட வசதி இல்லை.
திருப்பூரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் புத்தக கண்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகளால் தற்போது புத்தகம் வாசிப்போர் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருவதை காண முடிகிறது.
எனவே திருப்பூர் மாவட்ட மைய நூலகம் ஒன்று அமைத்து தருவீர்கள் என்ற எதிர்பார்ப்போடு கல்வியாளர்களும், மாணவர்களும் புத்தகம் வாசிப்போரும் இருந்து வருகின்றனர். அந்த எதிர்பா ர்ப்பினை நிறைவேற்றிடும் வகையில், திருப்பூரில் கலைஞர் பேருந்து நிலையத்தின் எதிர்புறம் உள்ள மார்க்கெட் வளாகத்தில், 1953 இல் அமைக்கப்பட்ட காந்தி நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் அமைந்துள்ள இடம் 18 சென்ட் பரப்பளவு கொண்டது. இதனை புனரமைத்து, கட்டிடத்தை விரிவாக்கம் செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலகம் அமைத்துத் தரும்படி மாவட்ட மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.