கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
- வெங்கமேடு பகுதியில், வருவாய் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது.
- குடிநீர் மேல் நிலைத்தொட்டி கட்ட மாநகராட்சிக்கு அந்த இடம் வகை மாற்றம் செய்து வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி, 9வது வார்டு, வெங்கமேடு பகுதியில், வருவாய் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. அப்பகுதி யில், குடிநீர் மேல் நிலைத்தொட்டி கட்ட மாநகராட்சிக்கு அந்த இடம் வகை மாற்றம் செய்து வழங்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி பிரபு, 40 என்பவர் ஆவின் பெயரில் டீ ஸ்டால் நடத்தி வருகிறார். இந்நிலையில், தொட்டி கட்டுமான பணி துவங்கும் வகையில், கடையை காலி செய்யுமாறு, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பிரபு கடையை காலி செய்ய மறுத்தார். நேற்று காலை கடையை அகற்றும் விதமாக பொக்லைன் வாகனத்துடன் அதிகாரிகள் அங்கு சென்றனர். கடையை அகற்ற உரிய வகையில் அறிவிப்பு தரவில்லை என வாக்குவாதம் செய்த பிரபு, திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு அழைத்துச் சென்று சமாதானம் செய்தனர். அதன் பின் அவரே கடையை அகற்றிக் கொண்டார்.