உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்டத்தை கைவிடக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட விவசாயிகள் முடிவு

Published On 2022-08-23 07:38 GMT   |   Update On 2022-08-23 07:38 GMT
  • திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
  • பி.ஏ.பி., பாசனத்தில் 8 டி.எம்சி. அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.

திருப்பூர் :

பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம், பேரணி என விவசாயிகள் நடத்தி வரும் நிலையில், வரும் 25-ந் தேதி திருப்பூர் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பி.ஏ.பி., எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மூலம் 8 தொகுப்பணைகள் மூலம் நீர் சேமிக்கப்பட்டு பாசனத்துக்கு திருமூர்த்தி அணை மற்றும் ஆழியாறு அணை மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பி.ஏ.பி., பாசனத்தில் 8 டி.எம்சி. அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒட்டன் சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல பி.ஏ.பி. பாசன பகுதியில் இருந்து அத்திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு டெண்டரும் கோரப்பட்டுள்ளது. இது திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரு மாவட்ட பி.ஏ.பி. பாசன விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்த கூடாது .தண்ணீர் கொண்டு செல்வதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தில் முன்பு 9 சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 4 சுற்றுகளுக்கு வந்துள்ளது. முன்பு 120 நாட்கள் பாசனம் பெற்ற பகுதிகள் இன்று 20 நாட்கள் என்ற நிலைக்கு வந்துள்ளது.

பி.ஏ.பி. பாசனம் 3 நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும்.10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுமார் 12 லட்சம் விவசாயிகள் பி.ஏ.பி. யை நம்பி உள்ளனர்.மேலும் பி.ஏ.பி. மூலம் நீர் பெற உரிமை உள்ள உப்பாறு அணைக்கு வருடந்தோறும் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுகிறது‌.

இதேபோல் வெள்ளகோவில் அருகே உள்ள வட்ட மலைக்கரை ஓடை தடுப்பணைக்கு தர வேண்டிய உரிமை நீரும் மறுக்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த 22ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டுதான் தண்ணீர் பி.ஏ.பி. யில் இருந்து வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆறுகள் மூலம் குடிநீர் திட்டம் செயல்படுத்த வாய்ப்புள்ள நிலையில், 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்க அவசியமேயில்லை. ஆனால் அங்கு அமைய உள்ள தொழிற்பேட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லவே இத்திட்டம் செயல் படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News