ஏர் கலப்பையுடன் விவசாயிகள் போராட்டம்
- போராட்டத்தில் தெற்கு அவிநாசி பாளையம் கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 12-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் தெற்கு அவிநாசி பாளையம் கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் ஏர் கலப்பை, மண்வெட்டி வைத்து 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொங்கலூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். அவிநாசி பாளையம் பத்மநாபன், தொட்டியபாளையம் சம்பத், ஆனந்த், அய்யம்பாளையம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், துணைப்பொதுச்செயலாளர் பார்த்தசாரதி , இனாம் நில விவசாயிகள் இயக்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் முருகேசன், சங்கத்தின் மாநில, மாவட்ட ஒன்றிய, நிர்வாகிகள், நொய்யல் பாதுகாப்பு இயக்கத்தின் திருஞானசம்பந்தன்,தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் புலவர் திருக்குமரன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.