ராபி பருவ பயிர் காப்பீடு செய்ய வேண்டுகோள்
- சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பயிர்க்கடன் பெறாதவர்கள், அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகலுடன் சென்று காப்பீடு செய்யலாம்.
உடுமலை:
எதிர்பாராத இழப்புகளுக்கு இழப்பீடு பெறவும், பண்ணை வருவாயை நிலை நிறுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை பின்பற்றவும், அரசு பயிர்க்காப்பீடு திட்டம் அவசியம். அதன்படி 2016 முதல், மத்திய அரசின் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டுக்கான காப்பீடு நிறுவனம் அறிவிக்கப்பட்ட நிலையில் 'ராபி' பருவத்துக்கான பயிர்காப்பீடை துவக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல், மக்காச்சோளம், பாசிப்பயறு, கொண்டை கடலை, நிலக்கடலை, சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:-
'ராபி' பருவத்துக்கு பயிர்காப்பீடு செய்ய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்யலாம். பயிர்க்கடன் பெறாதவர்கள், அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகலுடன் சென்று காப்பீடு செய்யலாம்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில், இதுதொடர்பான விவரங்களை பெறலாம். ஒரு ஏக்கர் நெல்லுக்கு, 559.50 ரூபாய், பாசிப்பயறு -253.94 ரூபாய் செலுத்தி நவம்பர் 15ந் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்.
மக்காச்சோளம் - 486.75 ரூபாய், கொண்டை கடலை -269.25 ரூபாய், பருத்தி -693.60 ரூபாய் பிரிமியம் செலுத்தி நவம்பர் 30-ந் தேதிக்குள் காப்பீடு செய்யலாம். சோளம் -38.61 ரூபாய் செலுத்தி, டிசம்பர் 15க்குள் காப்பீடு செய்யலாம். நிலக்கடலை -470.25 ரூபாய் செலுத்தி டிசம்பர் 31க்குள் காப்பீடு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.