இந்தியா கூட்டணி காணாமல் போகும் - புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி
- வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகிக்கும்.
- பிரதமர் யார் என்று அறிவிக்கும் சூழல் ஏற்படும் போது அந்த கூட்டணி காணாமல் போய்விடும்.
திருப்பூர்:
புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகிக்கும். அந்த கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும். 5 மாநில சட்டமன்ற தேர்தல் வந்த உடன் இந்தியா கூட்டணியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை.
5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா 3 மாநிலங்களை கைப்பற்றும். ஏற்கனவே ஆட்சியில் உள்ள மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது தெரியாது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்று அவர்களால் சொல்ல முடியாது.
பிரதமர் யார் என்று அறிவிக்கும் சூழல் ஏற்படும் போது அந்த கூட்டணி காணாமல் போய்விடும். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். தமிழகத்திலும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா. கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடியை தவிர நல்ல தலைவரை இந்தியா கூட்டணி மற்றும் எந்த கட்சியாலும் காட்ட முடியாது. தமிழகத்தில் யார் பிரதமர் என்று வாக்கு கேட்பார்கள் என்பதும் கேள்விக்குறிதான். இதுவே பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்க காரணமாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.