உள்ளூர் செய்திகள் (District)

 சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

சீராக குடிநீர் வழங்க கோரி சுல்தான்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-06-12 07:20 GMT   |   Update On 2023-06-12 07:20 GMT
  • சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சுல்தான்பேட்டையிலிருந்து மங்கலம் செல்லும் சாலையில் அமர்ந்து, குடிநீர் சீராக விநியோகிக்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் , திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் , மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி முத்துபரமேஸ்வரி , மங்கலம் வருவாய்த்துறை அதிகாரி கலையரசன் மற்றும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்"என தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News