ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு பேரணி
- தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடந்தது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
விழிப்புணர்வு பேரணிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தமிழ் ஆட்சிமொழி சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தொடங்கி எம்.எப். ரோடு, நவல்பூர், எம்.பி.டி ரோடு வழியாக சென்று முத்துக்கடையில் முடிந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், கோபிகிருஷ்ணா மற்றும் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், தமிழ் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.