பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக மழைச்சோறு எடுத்து படையலிட்டு பூஜை செய்த பெண்கள்
- மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
- மழைச்சோறு மற்றும் நவதானிய உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி கவுண்டம்பாளையத்தில் உள்ள தேவேந்திர சுவாமி திடலில் இருந்து பெண்கள் கோபித்துக் கொண்டு மழை இல்லாததால் நாங்கள் ஊரை விட்டு செல்கிறோம் என வெங்கமேடு பகுதிக்கு சென்றனர்.
அவர்களை அந்த ஊரை சேர்ந்த கன்னிப்பெண்கள் கலசம், நவதானியங்களை எடுத்துக்கொண்டு சென்று அவர்களுக்கு படையிலிட்டு இனிமேல் பஞ்சம் வராது, ஊருக்கு திரும்பி வாருங்கள் என அழைத்து வந்தனர்.
அதன்பின்னர் ஒவ்வொரு வீடாக மழைச்சோறு பிச்சை எடுக்கும் நிகழ்வும், மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் அந்த மழைச்சோறு மற்றும் நவதானிய உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்த ஊரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் ஊருக்கு வெளியே உருவ பொம்மை கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.