விமானத்தில் கடத்த முயன்ற ரூ.46 லட்சம் வெளிநாட்டு பணம்
- திருச்சியில் இருந்து துபாய்க்கு
- விமானத்தில் கடத்த முயன்ற ரூ.46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன
திருச்சி :
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்வதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தற்போது அதிகரித்துள்ளது.அந்த வகையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் நோக்கி புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் (வயது 46) என்பவர் தனது உடமையில் வெளிநாட்டு பணமான யூரோ 53,133 கடத்த இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து சதாம் உசேனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.46 லட்சம் என தெரியவந்துள்ளது.