- காலை வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் , பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெளியில் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இவரை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கில்லை. இது குறித்து மாணவியின் தாய் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
அதேபோல் அரூர் அடுத்த சுண்டாங்கிபட்டி கிராமத்தைச் சார்ந்தவர் கார்த்திகேயன் ( 42). விவசாயி, இவருக்கு திருமணம் முடிந்து செண்பகம் (38) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 19 வருடங்கள் ஆன நிலையில் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 ம் தேதி கார்த்திகேயன் கோவிலுக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவருடைய மனைவி செண்பகம் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.